ஒடிசா மாநில கஞ்சா சாக்லேட் வியாபாரி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

சுமார் 34 கிலோ கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சயகுமார் சமல் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-09-26 12:30 GMT

சஞ்சயகுமார் சமல்

கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவில்பாளையம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 ம் தேதியன்று சுமார் 34 கிலோ கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சயகுமார் சமல் (40) என்பவரை பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பொது அமைதி மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சஞ்சயகுமார் சமல் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அந்த நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் கஞ்சா சாக்லேட் வழக்கு குற்றவாளியான சஞ்சயகுமார் சமலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News