மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் பகுதியில் காட்டு யானை உயிரிழந்தது பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2024-07-10 09:17 GMT

மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் வனப்பகுதியில் காட்டு யானை உயிரிழந்து கிடந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் பகுதியில் உள்ள புதர் காட்டின் அருகே குட்டை ஒன்று உள்ளது. அண்மையில் பெய்த மழை காரணமாக இந்த குட்டையில் சேறும் சகதியுடன் தண்ணீர் தேங்கியிருந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் குட்டையில் யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்ததில் இறந்து கிடந்த யானை, மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆண்டுகளாக சுற்றித்திரியும் ஊசி கொம்பன் என அழைக்கப்படும் 30 வயதான ஆண் யானை என்பதை கண்டறிந்தனர்.

யானை சேற்றில் சிக்கி உயிரிழந்ததா அல்லது உடல் நலக்குறைவு காரணமாக இறந்ததா என்பது அதன் உடற்கூறு ஆய்விற்கு பின்னரே தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். யானையின் உடலை மீட்பதற்காக ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டது. ஊசி கொம்பன் இறந்த யானை தாசம்பாளையம், ஓடந்துறை, கல்லார், சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக சுற்றித்திரிந்து வந்தது. இதன் தந்தங்கள் ஊசி போல் கூர்மையாக இருந்ததால், இதனை ஊசி கொம்பன் என வனத்துறையினர் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. காட்டு யானை உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் யானையை உடற்கூறு ஆய்வு செய்து மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News