நிபா வைரஸ் பரவல் எதிரொலி: கேரள எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரம்

கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைவரையும் பரிசோதனை செய்த பின்னரே, தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

Update: 2024-09-16 14:30 GMT

கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள்

கேரள மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் வந்த நபருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 9 ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், நிபா வைரஸ் பாதித்த திருவல்லி கிராமப் பஞ்சாயத்து மற்றும் மம்பத் கிராமன் பஞ்சாயத்து ஆகிய பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட நிர்வாகம் சார்பில் நிபா வைரஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மலப்புரம் மாவட்டத்தில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள கேரள மாநில எல்லைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைவரையும் பரிசோதனை செய்த பின்னரே, தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags:    

Similar News