கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர், மனைவியுடனான தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-04-22 08:39 GMT

தற்கொலை செய்து கொண்ட பாலகுமார்

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புலனாய்வு பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் பாலகுமார் (38). இவர் கோவை கணபதி மாநகர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது மனைவி சுமதி, தாஜ் குடும்ப நட்சத்திர உணவகங்களில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பணி உயர்வு கிடைத்திருந்தது. இதையடுத்து பயிற்சிக்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு லண்டனுக்கு சென்றிருந்தார். இதனால் இவர்களது இரு குழந்தைகளையும் சேலத்தில் உள்ள பாலகுமாரின் தந்தை சண்முகத்தின் வீட்டில் விட்டிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் பாலகுமார் ஈடுபட்டிருந்தார். அப்போது செல்போனில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இதனால் அவர் உறவினர்களின் அழைப்புகளை துண்டித்து வந்துள்ளார்.

கடந்த 20ம் தேதி வீட்டிற்கு சென்ற பாலகுமார், அதன் பின்னர் பணிக்கு வரவில்லை. அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவர் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், இது தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

நேற்று இரவு சரவணம்பட்டி காவல் துறையினர் பாலகுமார் வசித்து வந்த வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது தெரியவந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாலகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பது கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் இறந்து பல மணி நேரத்திற்கும் மேல் ஆகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News