தடாகத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு: மக்கள் அச்சம்

அடிக்கடி வனவிலங்குகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன.

Update: 2024-06-09 03:45 GMT

காட்டு யானை

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பழனியப்பா லே-அவுட் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய நான்கு காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்தது. குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்த காட்டு யானைகளை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகளை விரட்டிய சிறிது நேரத்திலேயே அங்கு ஒரு காட்டு பன்றியும் திடீரென வந்ததால், அங்கிருந்த தெரு நாய்கள் காட்டு பன்றியை துரத்தின. சிறிது நேரத்தில் அந்த காட்டு பன்றி வனப்பகுதிக்குள் சென்றது.

இப்பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு சிறுத்தை ஒன்று கோழியை பிடித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் அடிக்கடி வனவிலங்குகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி இங்கு வருவதாகவும் வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News