மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்..!

மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களுக்கு, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, டோக்கன் அடிப்படையில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

Update: 2021-06-14 03:43 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மாவட்டம் முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவி ஷீல்ட் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களுக்கு மட்டும் சிறப்பு முகாம்கள் மூலம் கோவி ஷீல்ட் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 77 மையங்களில் காலை 10 மணி முதல் தடுப்பூசி போட திட்டமிட்டு இருந்த நிலையில் தடுப்பூசி வருகை தாமதமானதால் தடுப்பூசி போடும் நேரம் மதியம் ஒரு மணிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து மதியம் ஒரு மணி முதல் தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொது மக்கள் இன்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி என்பதற்கான அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களுக்கு, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, டோக்கன் அடிப்படையில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. மாநகர பகுதிகளில் 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள், புறநகர் பகுதிகளில் 46 பள்ளிகள் என 77 சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது பாதுகாவலர்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News