விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை: சக அதிகாரி கைது

புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார்

Update: 2021-09-26 15:00 GMT

அமிர்தேஷ்

கோவை பந்தய சாலை பகுதியில் விமானப் படை பயிற்சி மையத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 பேர் பயிற்சிக்காக வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி தன்னை சக அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கோவை விமான படை கல்லூரியில் பயிற்சியில் இருந்த லெப்டினல் அமிர்தேஷ் என்பவரை, கோவை காவல் துறையினர் கைது செய்தனர். அதிகாரி லெப்டினல் அமிர்தேஷ்,  நீதிபதி இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார். விமான படை அதிகாரி மீது, கோவை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் அபிடவிட் தாக்கல் செய்தார். கோவை காவல் துறை பதில் அபிடவிட் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில், விமானப் படை அதிகாரி லெப்டினல் அமிர்தேஷை ஒரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து, லெப்டினல் அமிர்தேஷை, உடுமலை கிளை சிறையில் காவல் துறையினர் அடைத்தனர். இது குறித்து காவல் துறையினர் கூறும் போது, லெப்டினல் அமிதேஷ் மீது 376 என் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கின் அடுத்த கட்ட நகர்வு  இருக்கும் என தெரிவித்தார். 

Tags:    

Similar News