கோவை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

கோவை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸ் தீ பிடித்து எரிந்தது.

Update: 2021-05-22 10:00 GMT

கோவையில் ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ.

கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர், 108 ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் உதவியுடன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு காலை 11.30 மணி அளவில் அழைத்து வரப்பட்டு உள்ளார்.

ஆம்புலன்சில் இருந்து நோயாளியை இறக்கி கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு செவிலியர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்ததில் ஆம்புலன்ஸில் தீப்பற்றியது. ஆம்புலன்ஸ் முழுவதும் தீ மளமளவென பரவத் தொடங்கி கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனால் அங்கு சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளிகள் பலர் அச்சமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக   ஆம்புலன்ஸ் அருகில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆம்புலன்ஸில் தண்ணீரை பீச்சி  அடித்து சுமார் அரை மணி நேரத்திற்குள்ளாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பந்தய சாலை போலீசார் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags:    

Similar News