யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வன எல்லைகளில் கான்கீரிட் சுவர்: வனத்துறை அமைச்சர்

அடுத்த 10 ஆண்டு காலத்தில் தமிழக வனத்தின் பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-10 10:00 GMT

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.

கோவை வேளாண்மை பல்கலை கழகத்தின் அருகில் உள்ள கோவை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை வளாகத்தில், வேளாண் கருவிகளை காட்சி படுத்த படகாட்சி அரங்கத்தினை இன்று வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

பின்னர் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, உழவர் நலத்துறைக்கு தனியாக பட்ஜெட் போட்டு 37,000 கோடி ரூபாயினை தமிழக அரசு உருவாக்கி கொடுத்துள்ளது என தெரிவித்தார். இந்த கண்காட்சி மூலம் விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் 52 விதமாக வேளாண் கருவிகள் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். 

கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தினசரி 7000 அளவிற்கு இருந்த தொற்று தற்போது 200 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், கொரோனா 3 வது அலை இந்த மாத கடைசி அல்லது அடுத்த மாத துவக்கத்தில் வர வாய்ப்பு இருக்கிறது எனவும், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு இருக்கின்றது எனவும் தெரிவித்தார். கோவை மாவட்டதில் 22 லட்சம் பேர் வரை இதுவரை ஊசி போட்டுள்ளனர் எனவும், இது வரை 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்த அவர், நாளை மறுதினம் கோவை மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் பேருக்கு ஊசி போடப்பட இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது 23.98 சதவீதம் மட்டுமே வனம் இருக்கிறது என கூறிய அவர் அடுத்த 10 ஆண்டு காலத்தில் தமிழக வனத்தின் பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், 1,30,060 ஹெக்டேர் பகுதியில் மரம் நடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார். யானை மனித விலங்கு மோதலை தடுக்க வன எல்லைகளில் 3 மீட்டருக்கு அகழி வெட்டப்பட்டு , அகழியின் இருபுறமும் கான்கீரிட் சுவர்களை ஏற்படுத்தினால் அந்த அகழி 25 முதல் 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும் எனவும் தற்போது வெட்டப்படுகின்ற அகழிகள் ஒரு வருடத்திலேயே மண் சரிந்து விடுவதாகவும் தெரிவித்தார். ஒரு சில இடங்களில் அகழிகள் வெட்டப்பட்டு கான்கிரிட் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதை பார்ததாகவும் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.

Tags:    

Similar News