கோவையில் இன்று 793 பேருக்கு கொரோனா தொற்று- 25 பேர் பலி

கோவை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 793 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது; 25 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-06-23 15:29 GMT

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.

அதேநேரம், கோவையில் மே மாதத்தில் ஏறுமுகத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்புகள், ஜூன் மாதத்தில் இறங்குமுகத்தில் உள்ளது. கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து, குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

கோவையில் இன்று 793 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை, இரண்டு இலட்சத்து 15 ஆயிரத்து 51 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 7654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 1488 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 5 ஆயிரத்து 441 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால், மாவட்டத்தில் இன்று 25 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், கோவை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1956 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News