கோவையில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் துவங்கியது

மத்திய அரசு தொகுப்பில் இருந்து தடுப்பூசிகள் வந்ததை அடுத்து, கோவையில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கி இருக்கிறது.

Update: 2021-06-03 08:25 GMT

கோவையில், தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளதை அடுத்து, ஆர்வமுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து காத்திருக்கும் பொதுமக்கள்.

மத்திய அரசு தொகுப்பில் இருந்து 40,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 8000 கோவாக்சின் தடுப்பூசிகளும் என, மொத்தம்  48,000 தடுப்பூசிகள் நேற்று கோவைக்கு வந்தடைந்தது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள 88 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 பள்ளிகளில் இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அதன்படி, 88 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவி ஷீல்ட் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்றவாறு 100 முதல் அதிகபட்சமாக 500 கோவி ஷீல்ட் தடுப்பூசிகள் வரை, சுகாதார நிலையங்களுக்கு  வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 88 தடுப்பூசி மையங்களில் 47 மையங்களில் மட்டும், 28 நாட்களுக்கு முன்பு,  முதல் தவணை கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக அதிகாலை முதலே தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தடுப்பூசி இருப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப ஆதார் அட்டையுடன் தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. காலை 10 மணிக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய நிலையில் ராமநாதபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தை மாநகராட்சி ஆணையர் குமராவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தற்போது வரை மாவட்டத்தில் 5 லட்சத்து 22 ஆயிரத்து 577 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Tags:    

Similar News