மின் விளக்குகளால் ஜொலிக்கும் உக்கடம் மேம்பாலம் ; இறுதி கட்டப் பணிகள் தீவிரம்

Coimbatore News- கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், உக்கடம் மேம்பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2024-06-13 14:30 GMT

Coimbatore News- உக்கடம் மேம்பாலம்

Coimbatore News, Coimbatore News Today- கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல் மற்றும் வாளையாறு, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு உக்கடம் – ஆத்துப்பாலம் சாலை முக்கியமான வழித்தடமாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் உக்கடம் – ஆத்துப்பாலத்தை மக்கள் எளிதில் கடக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்படும் என கடந்த 2011 - ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வரை 4 வழித்தட மேம்பாலம் அமைக்கும் வகையில், கடந்த 2018ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து திட்ட வடிவத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

இதனைத் தொடர்ந்து, 127.50 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. பின்னர் மக்களின் கோரிக்கையை ஏற்று கரும்புக்கடை, ஆத்துப்பாலத்தை கடந்து,பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலைகளில் திரும்பும் வகையில் இந்த பாலமானது நீட்டிக்கப்பட்டது. கொரோனா காரணமாக இந்த பாலம் கட்டுமான பணியில் சில காலம் தொய்வு ஏற்பட்டாலும், தற்போது கட்டுமான பணி விறு விறுப்பாக நடந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தின் பணிகள் அனைத்தும் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. ஆத்துப்பாலம் – உக்கடம் வரை முதல் பிரிவாகவும், ஆத்துப்பாலம் – பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, சுங்கம் சாலை ஆகியவை நீட்டிக்கப்பட்ட பிரிவாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் அனைத்தும் துரிதமாக நடந்து வருகின்றன. ஆத்துப்பாலம் - உக்கடம் முதல் கட்டப் பிரிவில் பணிகள் அனைத்தும் கடந்த மே மாதம் முடிக்கப்பட்டு உள்ளன.

கோவையில் உள்ள ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் செல்வபுரம் பைபாஸ் சாலையை ஒட்டிய இடத்தில் இறங்கி ஒப்பணக்கார வீதியை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லும் வகையில் இந்த பாலமானது கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதில் கரும்புக்கடை முதல் உக்கடம் சந்திப்பு வரை 4 வழித்தட மேம்பாலமாகவும் ஒப்பணக்கார வீதியை அடையும் இறங்கு தளம் 2 வழித் தடமாகவும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டப் பிரிவில், மேம்பாலத்தின் மொத்த தூரம் 1, 454.80 மீட்டராக உள்ளது. இந்த பாலத்தின் நீளம் 3.8 கி.மீ ஆகும். நான்கு வழிச் சாலையாக 17.2 மீட்டர் அகலத்தில் இப்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News