கோவை நீதிமன்றம் அருகே சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு

கோவை ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு பகுதியில் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2024-06-09 09:17 GMT

கோவையில் நீதிமன்றம் அருகே சாலையில்  ஏற்பட்ட திடீர் பள்ளம்.

கோவை நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை, குடிநீர் குழாய், மின் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாநகரின் மையப்பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. அதற்கு அருகே கே.ஜி. மருத்துவமனை, திரையரங்கம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இந்த நிலையில் நீதிமன்ற வளாகம் அருகே கே.ஜி. மருத்துவமனை மற்றும் நீதிமன்ற வளாகம் ஆகிய இரண்டும் இணையும் ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு பகுதியில் திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டது. அங்கு சாலையில் குடிநீர் குழாய் உடைந்தது தண்ணீர் வெளியேறியது. மேலும் தண்ணீர் தொடர்ந்து வெளியேறியது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் போக்குவரத்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல் துறையினர் அப்பகுதி வழியாக போக்குவரத்திற்கு தடை விதித்தனர். வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் ரயில் நிலையம், ஆட்சியர் அலுவலகம், டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றவர்கள் சற்று சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை செல்லக் கூடிய குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கமிஷனர் அலுவலகம் முன்பு சீர் செய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் இறங்கினர். அந்த பாதாள சாக்கடை குழாய் சீர் செய்யும் பணியில் தற்போது அடைப்பு ஏற்பட்டு குடிநீர் செல்லக் கூடிய குழாயும் உடைந்து உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாய் மற்றும் சாலையை சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News