கோவையில் கொட்டும் தென்மேற்கு பருவமழை: மக்கள் மகிழ்ச்சி

கோவையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.

Update: 2024-07-18 03:30 GMT

மழை

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கோவையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் நேற்றைய தினம் சின்னக்கல்லார் பகுதியில் அதி கனமழையும், வால்பாறை, சிங்கோனா, சோலையார் ஆகிய பகுதியில் கனமழையும், பீளமேடு,சிறுவாணி அடிவாரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 15.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதேபோல தொடர் மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர் மட்டம் நேற்று 2 அடிக்கு அதிகரித்து 40.54 அடியாக உயர்ந்துள்ளது. 45 அடி வரை இந்த அணையில் தண்ணீர் தேக்க முடியும் என்பதால், விரைவில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கோவையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் வெயில் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News