மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு

பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-13 12:15 GMT

மீரா ஜாக்சன்.

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே மாணவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளது போலீசாருக்கு கிடைத்தது. அதில், "யாரையும் சும்மா விடக் கூடாது" என்று குறிப்பிட்டு, ரித்துவின் தாத்தா, எலிசா சாருவுன் தந்தை மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியரை குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஒரே ஒருவர் மட்டும் கைதாகியுள்ளதால் போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை என்று கூறி, மாணவியின் பள்ளி நண்பர்கள் இன்று கோவை அரசு மருத்துவமனை முன்பு பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவி வீட்டின் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவியின் வீட்டிற்கு முன்பும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு கோவை மாநகர துணை ஆணையாளர் ஜெயச்சந்திரன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "இந்த வழக்கில் குற்றச்செயலில் ஈடுபட்டவர் நேற்றே கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அப்பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி எழுதிய கடிதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News