உக்கடத்தில் மக்களின் வாழ்வியலை பறைசாற்றும் ஓவியங்கள் ; மக்கள் வியப்பு

ஓவியங்களால் அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்கள் புது பொலிவு பெற்று வருவதால், இந்த ஓவியங்கள் கோவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது

Update: 2024-02-06 13:15 GMT

அடுக்குமாடி குடியிருப்பில் தத்ரூபமாக வரையப்பட்டுள்ள ஓவியங்கள்

ஸ்ட்ரீட் ஆர்ட் என்ற அமைப்பினர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சாதாரண மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு சென்று, அங்குள்ள சுவர்களில், அவர்களின் வாழ்வியலை மையப்படுத்தி, தத்ரூபமாக ஓவியங்கள் வரைந்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் புல்லுக்காடு மைதானத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓவியங்களை அவ்வமைப்பினர் வரைந்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இதற்கு முன், கோவையை சேர்ந்த ஓவியர் ஜீவா மற்றும் பிரான்ஸ் நாட்டு ஓவியர்கள் பலரும் இணைந்து, பல்வேறு விதமான ஓவியங்களை வரைந்தனர். அந்த ஓவியங்கள் கோவை மக்களை ஆச்சரியப்படுத்தியது.

தற்போது சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இருந்து ஓவியர்கள் வருகை தந்துள்ளனர். இவர்களுடன் இந்திய ஓவியர்கள் இணைந்து, ஓவியம் வரைய ஆரம்பித்திருக்கின்றனர். 42 அடி உயரம் மற்றும், 42 அடி - அகல சுவற்றில் ஓவியம் வரையப்படுகிறது.

முதற்கட்டமாக, மெஸ் ஒன்றில், ஒரு வாழை இலையில், ஊத்தப்பம், இட்லி பொடி, உளுந்த வடை இருப்பது போலவும், ஒருவர் டீ ஆற்றுவது போலவும், கண்ணாடி டம்ளரில் டீ இருப்பது போலவும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.

அதேபோல வாங்க சாப்பிடலாம் என ஒருவர் பானிபூரி விற்கும் படமும் வரையப்பட்டுள்ளது.  மற்றொரு புறத்தில், ஓவியத்தின் மீதமுள்ள பகுதியை வரைய இருக்கின்றனர்.

வரையப்பட்ட ஓவியங்களால் அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்கள் புது பொலிவு பெற்று வருகிறது. பார்வையாளர்களிடம் வியப்பை ஏற்படுத்தும் இந்த ஓவியங்கள், கோவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Tags:    

Similar News