பேருந்தில் 5 மாத குழந்தையை விட்டு சென்ற தாய்: காவல் துறையினர் விசாரணை

ரயில் நிலையம் வந்த பின் திவ்யா இறங்குவதற்காக தாயை தேடிய போது, பேருந்தில் அவரை காணவில்லை.

Update: 2024-01-20 05:30 GMT

காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை.

திருச்சியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண் கோவையில் தங்கி இருந்து ஆடிட்டிங் படிப்பு படித்து வருகிறார். இவர் நேற்று சொந்த ஊர் செல்வதற்காக காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு தனியார் நகர பேருந்தில் சென்றுள்ளார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அருகில் குழந்தையுடன் நின்று இருந்த பெண் ஒருவர் தன்னிடம் இருந்த ஐந்து மாத பெண் குழந்தையை திவ்யாவிடம் கொடுத்துள்ளார்.

ரயில் நிலையம் வந்த பின் திவ்யா இறங்குவதற்காக தாயை தேடிய போது, பேருந்தில் அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா இது குறித்து பேருந்து நடத்துநரிடம் தெரிவித்தார். பின்னர் பேருந்தை ரயில் நிலையம் அருகே நிறுத்தி விட்டு குழந்தையின் தாயை பேருந்து முழுவதும் தேடியுள்ளனர்.

ஆனால் அந்தப் பெண் இல்லாததால் உடனடியாக பந்தய சாலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது. இந்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல் துறையினரிடம் குழந்தை ஒப்படைக்கபட்டது. பின்னர் குழந்தை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தை பராமரிப்பு வார்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயின் அடையாளங்களை பெற்று காந்திபுரம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் குழந்தையின் தாய் யார் என்பது குறித்தும், அல்லது திருடப்பட்ட குழந்தையா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News