தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எங்கே டெங்கு இருக்கின்றது என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வேண்டும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2024-10-04 09:30 GMT

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்புற சமுதாய நல மையத்தினை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.இதேபோல் தாளியூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.58.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார அலகு கட்டிடங்களையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சிங்காநல்லூர் பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடங்கள், தாளியூர் கட்டிடடங்கள் என மொத்தமாக ரூ. 2.08 கோடி மதிப்புடைய புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதே போல் தனியார் மருத்துவமனையிலும் இன்று புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். சுகாதார துறையில் ஏற்கனவே இருக்கின்ற பழைய கட்டிடத்திற்கு கூடுதல் புதிய கட்டிடம் கட்டப்படுகின்றது எனவும், அந்த இடங்களில் புதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டியது இல்லை எனவும் தெரிவித்தார்.

மருத்துவத் துறையில் மருத்துவர்கள், செவலியர்கள், மருத்தாளுநர்கள் பணியிடங்கள் நியமனம் செய்யப்படுகின்றது என தெரிவித்த அவர், விரைவில் 2253 மருத்துவர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர், இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவித்தார். 1066 சுகாதார ஆய்வாளர் நியமனம் குறித்து 38 வழக்குகள் போட்டிருக்கின்றனர் எனவும், இந்த வழக்கு போட்டவர்களை அழைத்து பேசி வருகின்றோம் என தெரிவித்தார். காலியாக இருந்த மருத்துவ கல்லூரி முதல்வர்கள் பணிநியமனம் நேற்று செய்யப்பட்டு இருக்கின்றது எனவும், வழக்குகள் இருப்பதால் பணிநியமனங்களில் தாமதம் ஆகின்றது எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை, 13 வகையான தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றது எனவும், சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் வரும் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் கிரிஸ்டல் நிறுவனம் மூலம் ஒப்பந்த பணியாளர் பணியில் ஈடுபடுத்த படுகின்றனர் எனவும், அது தொடர்பான புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.ம ழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன பணிகள் பருவமழை வரும் போது செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அக் 15 க்கு பின்பு தேவையான இடங்களில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் எங்கே டெங்கு இருக்கின்றது என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வேண்டும் எனவும், டெங்கு இறப்பு அதிமுக ஆட்சியில்தான் அதிகம் எனவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் 2012ல் டெங்கு இறப்பு 66 பேர் எனவும், 2017 ல் 65 பேர் எனவும், தமிழக வரலாற்றில் அதிகப்படியான டெங்கு இழப்புகள் இதுதான் எனவும் தெரிவித்தார்.இந்த ஆண்டில் டெங்கு காரணமாக இறந்தது ஆறு பேர் தான் எனவும்,  அதுவும் தனியார் மருத்துவமனை, முறையான சிகிச்சை இல்லாதது, நோய் எதிர்ப்பு சிகிச்சை இல்லாதது போன்ற காரணத்தால் உயிரிழப்பு எனவும் தெரிவித்தார். டெங்கு பாதிப்பு எங்கேயுமே இல்லை, பதட்டத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News