3 சட்டங்களின் பெயர்கள் மாற்றத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டங்களின் பெயர் மாற்றம் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-07-02 09:57 GMT

கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய நீதிமன்ற சட்டங்களான IPC, Cr PC, IEA ஆகிய மூன்று சட்டங்களை புதிதாக இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழியில் BNS- பாரதிய நியாய ஷன்ஹிதா, BNSS- பாரதிய நஹ்ரிக் சுரஷா, BS- பாரதிய சஷய அதினயம் என மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பெயர் மாற்றங்களை கண்டித்து தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம் உண்ணாவிரதப் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று உண்ணாவிரத போராட்டமானது நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து நாளைய தினம் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து 8ம் தேதி திருச்சியில் கண்டன பேரணி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெயர் மாற்றத்தை கைவிட்டு பழைய நடைமுறையே தொடர வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News