கவுண்டம்பாளையம் படம் நாடக காதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் - நடிகர் ரஞ்சித்..!

நாடக காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக நான் இயக்கியும், நடித்தும் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது

Update: 2024-06-22 07:00 GMT

நடிகர் ரஞ்சித்

கோவை கோனியம்மன் கோவிலில் கவுண்டம்பாளையம் திரைப்பட இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் மற்றும் படக் குழுவினர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித் கூறும் போது,

”கவுண்டம்பாளையம் திரைப்படம் ஜூலை 5ம் தேதி வெளியாகிறது. நாடக காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக நான் இயக்கியும், நடித்தும் எடுக்கப்பட்டுள்ளது. நாடக காதலால் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்களின் கண்ணீர் மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டது.

பணக்கார பிள்ளைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நாடக காதல் தான் இது. இன்றைய காலகட்டத்தில் வரதட்சணை, கொலை, தற்கொலை போன்றவை நடைபெற்று வருகிறது. சுயமரியாதை திருமணம் எனச் சொல்லி எவ்வளவு கொடுமை நெல்லையில் நடந்துள்ளது. சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும். சமூக நீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும். சுயமரியாதை, சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்ணிற்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்துவிட்டு, மற்ற பெண்களை  பண்ணச்  சொல்லுங்கள்.

ஆனால் பண்ண மாட்டார்கள். பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்க கூடாது. அப்படி சட்டம் கொண்டு வர வேண்டும். பெற்றவர்கள் தான் உயர்ந்த சாதி. பெற்றவர்களை பிரித்து கல்யாணம் நடத்தி வைப்பதற்கு, சேர்த்து வைத்து அவர்களின் சமதத்துடன் நடத்தி வைக்கலாமே?.

நான் நாடக காதல் என்று சொல்லும் போது மட்டும் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். நாய், பன்றி, காக்கா, பொங்கல் உள்ளதா?மாடுகள் தெய்வமாகவும், விவசாயத்திற்கு காலம் காலமாக பக்கபலமாக உள்ளது. என் படத்தின் மீது யாருக்கெல்லாம் கோபம் வருகிறதோ, அவர்கள் நாடக காதலை ஆதரிப்பவர்கள். அரசியல் கட்சி ஆரம்பிக்க திட்டமில்லை, சேரவும் திட்டமில்லை. கள்ளச்சாராயம் விற்பவர்கள் சேர் பிடித்து சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளனர். கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா? நாளைய தலைமுறையை காப்பாற்ற அரசியல் மாற்றம் வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு தேர்தல் வந்த காரணத்தினால் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பணம் கொடுக்கின்றனர்.

சாலையில் திரும்பும் இடங்களில் எல்லாம் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. அதை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. கள்ளச்சாராயத்தை இவர்களால் ஒழிக்க முடியாது. பிகவுண்டம்பாளையம் படத்திற்கு நிறைய எதிர்ப்பு உள்ளது. அரசியல் மிகப்பெரிய வியாபாரம். எனவே அதில் அரசியல் கடைகள் உள்ளது. புதிய கடைகளும் திறக்கப்படவுள்ளது.

நல்ல அரசியல் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. விவசாயி தற்கொலை ஏன் அரசு நிவாரணம் கொடுக்கவில்லை? கள்ளுக் கடையை திறக்க வேண்டும். கள்ளுகடையில் வருமானம் இல்லாத காரணத்தினால் இவர்கள் விரும்புவதில்லை. மதுவை வைத்து தான் வளர்ச்சி. தமிழ்நாடு மதுவில் வரும் வருமானத்தில் தான் வளர்ச்சி அடைந்து வருகிறது.

200 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. ஏ சான்றிதழ் பெற்றிருந்தாலும், ஆபாச காட்சிகள் இல்லை. ஆனால் நாடக காதல் குறித்துப் பேசும் படம் என்பதால் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News