அன்னூரில் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: மக்கள் அவதி

உபரி நீர் செல்லும் நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மழைநீர் தாழ்வான பகுதிகளுக்கு சென்றது

Update: 2024-06-05 09:46 GMT

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பரவலாக கன மழை கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்  மழை காரணமாக அன்னூர் கோவன் குளம் நிரம்பிய நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக அன்னூர் கோவன் குளம் முழு கொள்ளவை எட்டியது. இதையடுத்து அந்த குளத்தில் உபரி நீர் வெளியேறி வருகிறது. உபரி நீர் செல்லும் நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மழைநீர் தாழ்வான பகுதிகளுக்குள் சென்றது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

குறிப்பாக அன்னூர் புவனேஸ்வரி நகர் மற்றும் பழனி கிருஷ்ணா நகர் அவென்யூ உள்ளிட்ட குடியிருப்புகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதிவாசிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு முறையும் குளம் நிரம்பும் போதெல்லாம் இப்பகுதிகளில் மழைநீர் தேங்குவதாக குற்றம் சாட்டும் இப்பகுதி மக்கள், கோவை - சத்தி சாலையில் உள்ள பாலத்தில் சிலர் மண்ணை கொட்டி அடைத்துள்ளதால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் போனதாக குற்றம்சாட்டினர்.

இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மழைநீரை உடனடியாக அகற்றவும், இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News