கோவையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மலர்கள் கொடுத்து வரவேற்பு

கோவையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மலர்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.;

Update: 2023-06-14 14:21 GMT

கோவையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சிகள்.

கோவையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மலர்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிந்ததை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்த பின்னர் கடந்த 12-ந் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. அன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் தொடங்கியது. 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தொடக்ககல்வி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கியது. கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் தொடக்க பள்ளிகள் என மொத்தம் 1081 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து மாணவர்களும் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் சீருடை அணிவித்து, பேக் மாட்டி பள்ளிக்கு அழைத்து வந்து விட்டனர். பள்ளியில் மாணவர்களுக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி நுழைவு வாயில் முன்பு ஆசிரியர்கள் நின்று கொண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் கொடுத்தும் வரவேற்றனர். பின்னர் பள்ளிக்குள் சென்றதும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. சாப்பிட்டு முடித்து விட்டு வகுப்பறைக்கு மாணவர்கள் சென்றனர்.

அங்கு அவர்களுக்கு புதிய பாடபுத்தகங்கள், புத்தகப்பைகளை வழங்கினர். மாணவர்கள், நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்ததால் தங்களது நண்பர்களை பார்த்து ஒருவருக்கொருவர் கை கொடுத்து தங்களது நினைவுகளை பேசி கொண்டனர். இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் கூறியதாவது:-

கோவை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட 8 வட்டாரங்களிலும் 1-ம் வகுப்பில் மட்டும் தமிழ் வழியில் 790 மாணவர்களும், ஆங்கில வழியில் 108 மாணவர்கள் என 898 பேர் சேர்ந்துள்ளனர். 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை புதிதாக 360 பேர் சேர்ந்துள்ளனர். இதேபோல 6 முதல் 8-ம் வகுப்பு வரை 58 பேர் சேர்ந்துள்ளனர். இதேபோல் 6 முதல் 8-ம் வகுப்பு வரை 58 பேர் சேர்ந்துள்ளனர். தொடக்க கல்வி துறையின் கீழ் மட்டும் 8-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் 1,095 மாணவர்க ளும், ஆங்கில வழிக்கு 221 பேரும் புதிதாக இந்த கல்வியாண்டில் சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகள் திறப்புக்கு முன்பு பள்ளிகளில் தூய்மை பணிகள் உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News