தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி விட்டு தற்கொலை செய்து கொண்ட மகள்

கோவை போத்தனூரில் தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி விட்டு மகள் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-05-23 14:39 GMT

கோவை போத்தனூர் அருகே தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டு மகள் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை போத்தனூர் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது மகள் விஜயலட்சுமி (வயது 20). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து இருந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் விஜயலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினர். இதனால் அவர் கடந்த 2 மாதங்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று விஜயலட்சுமியின் தாய் தனது மகனுடன் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது வீட்டில் விஜயலட்சுமி மட்டும் இருந்தார். அவர் செல்போன் மூலமாக தனது தாயை தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த சாந்தி தனது மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் நீண்ட நேரமாக அவர் போனை எடுக்கவில்லை. உடனடியாக அவர் தனது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினார்.

அவர் சென்று பார்த்த போது விஜயலட்சுமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை கேட்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். இந்த தகவல் கிடைத்ததும் போத்தனூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் தற்கொலை செய்து கொண்ட விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News