கோவை மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் தகுதி இழப்பு

தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததை அடுத்து திமுக பெண் கவுன்சிலர் தகுதி இழக்கிறார்.

Update: 2023-05-17 10:42 GMT

மாமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளாததால் தகுதி இழப்பு செய்யப்பட்ட திமுக உறுப்பினர்

கோவை மாநகராட்சி 97-வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் நிவேதா சேனாதிபதி (தி.மு.க), வயது 23. கோவை மாநகராட்சியின் இளம் கவுன்சிலராக இருந்தார். கடந்தாண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கோவை மாநகராட்சியிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (7,786) வெற்றி பெற்றவர் இவர்தான்.

இவரின் தந்தை மருதமலை சேனாதிபதி தி.மு.க மாவட்டப் பொறுப்பாளராக இருந்தார். அதனடிப்படையில் மேயர் பதவிக்கு தீவிரமாக முயற்சி செய்தும்  மேயர் பதவி கிடைக்கவில்லை.

தேர்தல் முடிந்த சிறிது காலத்திலேயே நிவேதா சிவில் சர்வீஸ் படிக்கச் சென்றுவிட்டார் எனத் தகவல் வெளியானது. அவருக்கு பதிலாக 97-வது வார்டு தி.மு.க செயலாளர் மகாலிங்கம் என்பவர் அறிவிக்கப்படாத கவுன்சிலராக வலம் வந்தார். வார்டு, மாமன்றம் என இரண்டிலும் நிவேதா ஆப்சென்ட் ஆனார்.

தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததை அடுத்து தகுதி இழக்கிறார். மாநகராட்சி மாமன்ற கூட்டங்கள், மாநகராட்சி நிர்வாக அறிவிப்பின்படி நடைபெறும். இதில் தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)இன் படி உள்ளாட்சி பதவி பறிபோகும்.

பிறகு அடுத்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(4) இன் படி சம்பந்தப்பட்ட நபர் கூட்டங்களில் பங்கேற்காதது குறித்து காரணம் ஏதாவது தெரிவித்து இருந்தால் மாநகராட்சி ஆணையாளர் அதனை வெளியிடுவார். அக்காரணத்தை தொடர்ந்து தகுதி இழந்தவர்கள் மீண்டும் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டம் முடிவு செய்யும்.

இதேபோல 95-வது வார்டு கவுன்சிலர் அப்துல் காதர் என்பவர் உடல்நிலை சரியில்லை என்பதால், நான்கு மாதங்கள் நடந்த கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் உரிய விளக்கம் அளித்தார். அதை மாமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் அவர் கவுன்சிலராகத் தொடரலாம் என கூறப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News