குடியரசு தினம்: கோவையில் பாதுகாப்பு பணியில் 1500 போலீஸார்...

குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை மாநகரில் 1500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-24 11:16 GMT

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீஸார்.

நாடு முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துகின்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகரிலும் பாதுகாப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கோவை மத்திய ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாருடன் இணைந்து கோவை மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகள் அனைத்தும் கடும் சோதனைக்கு பிறகே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், மோப்பநாய் உதவியுடனும் வெடிபொருள் கண்டறியும் நவீன கருவிகள் கொண்டும் ரயில் தண்டவாளங்கள், நடைமேடைகள் என அனைத்து பகுதிகளிலும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே துறை பாதுகாப்பு உதவி ஆணையர் பிரமோத் நாயர் தலைமையில் ரயில்வே காவல் ஆய்வாளர் சுனில் குமார் மற்றும் வெடிகுண்டு சோதனை உதவி ஆய்வாளர் ராஜா ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்களுடன் கோவை மாநகர காவல் துறையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், மாநகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் 1500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகை:

இதற்கிடையே, குடியரசு தின விழாவில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கான ஒத்திகைகளில் ராணுவத்தினர், காவல்துறையினர், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.அதன்படி கோவை மாவட்டத்தில் குடியரசு தின விழா கோவை வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. அதில் கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கான ஒத்திகை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதற்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News