இறுக்கமான சட்டை அணிந்த மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

காவல் துறையினர் ஆசிரியர் சிவரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-12-11 16:00 GMT

சிவரஞ்சித்

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான கலாதரன். இவரது 16 வயது 2வது மகன் (மிதுன்) அதே பகுதியில் உள்ள சி.எம்.எஸ் என்ற தனியார் பள்ளியில் பயாலஜி பிரிவில் 11ம் வகுப்பு பயின்று வந்தார். கால்பந்து வீரராகவும் மிளிர்ந்து வரும் சிறுவன், கோவை மாவட்ட அணிக்கு தேர்வாகியுள்ளார். மேலும் நீட் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். பள்ளி திறந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், மாணவருக்கு தைக்கப்பட்ட சட்டை இறுக்கமின்றி தளர்வாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது தாயார் சற்றே இறுக்கமாக இருக்கும் வகையில் சட்டையை தைத்து அனுப்பியுள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற போது, அங்கு வகுப்பறைக்கு வந்த இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித் என்பவர், சட்டை ஏன் இறுக்கமாக இருக்கிறது என மாணவரை கேட்டுள்ளார்.

அதற்கு மாணவர் விளக்கமளித்த போதும், சமாதானம் அடையாத ஆசிரியர் அவரை அறைந்ததோடு, அவரை குனியவைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மாணவருக்கு காது, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர் அளித்த தகவலின் பேரில் பள்ளிக்கு சென்ற மாணவரின் தந்தை அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். இது தொடர்பாக கலாதரன் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல் துறையினர் ஆசிரியர் சிவரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News