திமுகவை கண்டித்து வாழைப்பழங்களுடன் பாஜக நூதன பிரச்சாரம்

திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பொது மக்களை ஏமாற்றி விட்டதாக தெரிவித்தனர்.

Update: 2024-03-07 14:30 GMT

வாழைப்பழங்களுடன் பாஜக நூதன பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாயிலேயே வடை சுடுகிறார் எனக் கூறி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் உளுந்த வடை வழங்கி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் பிரதமர் மோடி புகைப்படத்துடன் உளுந்த வடை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி அளித்த எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இந்த பிரச்சாத்தில் ஈடுபட்டு வருவதாக திமுகவினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திமுகவின் வடை பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக சார்பில் வாழைப்பழம் கொடுக்கும் நூதன பிரச்சார இயக்கம் இன்று கோவையில் நடைபெற்றது. கோவை சிவானந்தா காலனியில் பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கையில் வாழைப்பழத்துடன் திரண்டனர். ஆனால் காவல் துறையினர் வாழைப்பழத்தை பொதுமக்களுக்கு வழங்க அனுமதி மறுத்தனர். அதையும் மீறி வாழைப்பழத்தை மக்களுக்கு வழங்கினால், கைது செய்ய நேரிடும் என எச்சரித்தனர். இதனையடுத்து பா.ஜ.கவினர் முதல்வர் ஸ்டாலின் முகமூடியையும், கையில் வாழைப்பழத்தையும் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பொது மக்களை ஏமாற்றி விட்டதாகவும், பொதுமக்களுக்கு வாழைப்பழத்தை கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

போராட்டத்தின் முடிவில் வாழைப்பழங்களை பொதுமக்களுக்கு கொடுக்க முடியாமல் போனதால், கொண்டு வந்திருந்த பழங்களை மக்கள் சார்பில் தாங்களே சாப்பிடுவதாக கூறி வாழைப்பழங்களை பாஜகவினர் சாப்பிட்டு விட்டு அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News