கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் 103 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கெட்டுப்போன, பழைய மீன்களை விற்பனை செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-09-03 11:15 GMT

கோவை உக்கடம் மீன்மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் என 12 பேர் அடங்கிய 6 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழு உக்கடம் லாரி பேட்டை பகுதிகளில் உள்ள 35 மொத்த மீன் மார்க்கெட் விற்பனை கடைகளிலும், செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள 16 கடைகளிலும் மொத்தம் 51 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டது.

இந்த திடீர் ஆய்வின் போது மொத்த மீன் விற்பனை கடைகளில் 5 கடைகளில் கெட்டுப்போன நிலையில், இருந்த சுமார் 65 கிலோ அளவிலான மீன்கள் மற்றும் 4 சில்லறை மீன் விற்பனை கடைகளில் சுமார் 38.05 கிலோ கெட்டுப்போன மீன்கள் மொத்தம் 103.5 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதன் மொத்த சந்தை மதிப்பு சுமார் 50,150 ஆகும்.

கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்து இருந்த சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் செய்யும் 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனவே இது போன்று கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். மேலும் இது போன்ற குறைபாடுகளை கண்டறிய நேரிட்டால் 9444042322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் Google Play store- இருந்து உணவு பாதுகாப்பு துறையின் tnfoodsafetyconsumer App என்ற செயலினை பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News