குழந்தைகளை அச்சமின்றி பள்ளிக்கு அனுப்ப அமைச்சர் சுப்பிரமணியன் வேண்டுகோள்
அரியலூில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், சிவசங்கர் ஆய்வு செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஆறாம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியினை பார்வையிட்டும், கொரோனா தடுப்பூசி அதிக அளவில் பொதுமக்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர். இதனைத்தொடர்ந்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பாதுகாப்பு பெட்டகத்தையும் கண்பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு கண்ணாடியையும் அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழக முதல்வர் வாரம் தோறும் சென்று தடுப்பூசி முகாமை ஆய்வு செய்து வருகிறார். மருத்துவர்களை உற்சாகப் படுத்துவதோடு, பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளையும் தமிழக முதல்வர் மேற்கொண்டு வருவது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான்.
இன்று நடைபெறும் ஐம்பதாயிரம் முகாம்களில் மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர். 60 லட்சம் பேருக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. எனவே இன்று நடைபெறும் முகாமில் இதற்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் 73 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. முப்பத்தி மூன்று கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஒரேஇடத்தில் கூடி கொரோனா தொற்றுக்கு நாம் வழிவகுத்து விடக்கூடாது. முககவசம் அணிதல், கைகழுவுதல் தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும். உலக அளவில் வல்லரசு நாடுகளில் அதிகளவில் மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும், தலா 150 மாணவர்கள் என்ற விகிதத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 850 மாணவர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. மீதம் 800 மாணவர்களுக்கு அனுமதி கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக குழந்தைகளின் கல்விக் கனவு சிதைந்து வருகிறது. கல்வியை காணாத தலைமுறையாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுக்கு கல்வி போதிப்பது அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வருகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றினால் மற்றவர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உண்டே தவிர, குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறைந்த அளவே என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. எனவே பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu