கூடுதலாக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களை இயக்க கோரிக்கை
விருதுநகர் - சிவகாசி பகுதிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பொதுமக்கள்- மாணவர்கள் கோரிக்கை;
பைல் படம்
விருதுநகர் - சிவகாசி பகுதிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதியில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தினமும், விருதுநகரில் இருந்து சிவகாசிக்கும், சிவகாசியில் இருந்து விருதுநகருக்கும் பல ஆயிரம் பேர், பேருந்துகளில் சென்று வருகின்றனர்.ஆனால், போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படாததால், அனைத்து பேருந்துகளிலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது. வேறு வழியில்லாத நிலையில், படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டிய அவலநிலை தொடர்கதையாக இருந்து வருகிறது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் படிக்கட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள், காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள், மாணவர்கள் மற்றும் வேலைக்கு சென்று வருபவர்கள் என பலதரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.