திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் ஆலயத்தில் பூக்குழி தேரோட்டம்

திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது

Update: 2023-03-23 05:30 GMT

தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம்சக்தி, பராசக்தி என்று கோஷமிட்டு உற்சாகமாக தேரை இழுத்தனர்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலின் பங்குனி பூக்குழி திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் அமாவாசை அன்று பக்தர்கள் விரதமிருந்து, காப்புக்கட்டி, மஞ்சள் ஆடை அணிந்து, கோயிலுக்கு முன்புள்ள பூக்குழி குண்டத்தில் தீ மிதித்து அம்மன் அருள் பெறுவது வழக்கம். பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மன் அருள் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு பூக்குழித் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பெரியமாரியம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, இரவு வேளைகளில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெற்றது.

அதிகாலை 5 மணிக்கு கோயிலுக்கு எதிரே உள்ள தீ குண்டத்தில் அக்னி வளர்க்கப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அதிகாலை பெரிய மாரியம்மனுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு பெரிய மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். மதியம் 1 மணிக்கு மிதுன லக்னத்தில் பூக்குழித் திருவிழா சிறப்பாகத் தொடங்கியது.

இந்நிகழ்வில், ஆண்களும், பெண்களுமாக 15,000 பேர் பக்திப் பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் பூக்குழி இறங்கினர். ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த தீச்சட்டி ஏந்தியும், உடம்பில் அலகு குத்தியும், வேப்பிலை ஆடை அணிந்து அங்கப்பிரதட்சணம் செய்தும் நகர்வலம் வந்தனர். பூக்குழி நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூரைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர் பூக்குழி திருவிழா நேற்று, வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையடுத்து இன்று, பூக்குழி திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

பின்னர் பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தேரோட்டம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம்சக்தி, பராசக்தி என்று கோஷமிட்டு உற்சாகமாக தேரை இழுத்தனர். கோவிலைச் சுற்றியுள்ள நான்கு ரதவீதிகளில் சுற்றி வந்து, பெரிய மாரியம்மன் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூரின் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News