கிராமசபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சிசெயலாளர்

கிராமசபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் தலைமறைவு, கைது செய்ய தனிப்படை அமைப்பு

Update: 2023-10-03 04:04 GMT

கேள்வி கேட்ட விவசாயியை எட்டி உதைக்கும் ஊராட்சி செயலாளர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார் குளம் ஊராட்சி கங்கா குளம் பகுதியில் இந்த கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்பகுதி அதிமுக எம்.எல்.ஏ மான்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். அப்போது விவசாயிகள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கூட்டத்தில் வேப்பங்குளத்தை சேர்ந்த அம்மையப்பன் விவசாயி என்பவர், ஊராட்சியில் உள்ள கிராமங்களில் சுழற்சி முறையில் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என உள்ளாட்சித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் கடந்த முறை நடந்த அதே இடத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்ற போது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை அதே இடத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இதனால் பிற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியாமல் சிரமத்தில் உள்ளனர் என்றார்.

மேலும் அவர் கூறுகையில் ,ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பிள்ளையார்குளம் ஊராட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் நிர்வாகம் தகுதி ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்றார்.

இதை கேட்டதும் கோபம் அடைந்த தங்க பாண்டியன் அதிமுக எம்.எல்.ஏ மான்ராஜ் முன்னிலையில் அந்த விவசாயியை எட்டி உதைத்து உள்ளார். அப்போது புகார் அளித்தவரை எப்படி தாக்கலாம் என்று கூறி அப்பகுதியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பிள்ளையார்குளம் செயலர் தங்கப்பாண்டியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் செல்வகுமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News