சிவகாசி அருகே சாலை மறியல் போராட்டம், பெண் காவலர் மீது தாக்குதல்- பதற்றம் போலீஸ் குவிப்பு

சிவகாசி அருகே நடந்த சாலை மறியல் போராட்டதில் பெண் போலீஸ் தாக்கப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்படடுள்ளனர்.

Update: 2021-04-30 05:00 GMT

சிவகாசி அருகேயுள்ள துலுக்கபட்டியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வேண்டுராயபுரம் அருகே உள்ள கோழிப்பண்ணையில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது வேண்டுராயபுரத்தை சேர்ந்த சிலர் இரு இளைஞர்களை பிடித்து கோழி திருட்டில் ஈடுபட்டதாக கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இரு இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து தங்களது கிராமத்தை சேர்ந்த இளைஞர்களை வேண்டுராயபுரத்தை சேர்ந்தவர்கள் தாக்கியதாக மாரனேரி காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் துலுக்கப்பட்டி கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

புகார் அளித்து இரண்டு தினங்களாகியும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த துலுக்கப்பட்டி கிராம மக்கள் விளாம்பட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேர்க்த்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது திடீரென ஒரு பெண்மணி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை முயற்சி மேற்கொண்டார். அப்போது அதனை தடுக்க முயன்ற பெண் போலீசாருக்கும் கிராம மக்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பெண் காவலரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் நிலவுவதால் இரு கிராமத்திலும் 100க்கும் அதிகமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News