சிவகாசியில் ரூ. 1½ லட்சம் புகையிலை பொருட்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-07-21 14:00 GMT

சிவகாசியில் ரூ. 1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர். இந்த நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து, புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. அதன்பேரில், பி.கே.என்.ரோட்டில் உள்ள ஒரு வீட்டை 2 பேர், வாடகைக்கு பிடித்து அதில், புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, நகரம் முழுவதும் வினியோகம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து சிவகாசி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலையரசி மற்றும் போலீசார் நேற்று அந்த வீட்டில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு மூடை, மூடையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1½ லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் திருமேனி நகரை சேர்ந்த அமல்ராஜ் (வயது 52) என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News