சாத்தூர் அருகே மோட்டார் பம்ப் பொருந்தும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே மோட்டார் பம்ப் பொருந்தும் போது தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-12-11 09:50 GMT

தொழிலாளி கிரேன் அறுந்து விழுந்து இறந்து கிடந்த கிணறு.

சாத்தூர் அருகே, கிணற்றில் மோட்டார் பம்ப் பொருத்தும், போது கிரேன் அறுந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு வெட்டும் பணிகள் நடந்து வந்தது. கிணற்றில் மோட்டார் பம்ப் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த வேல்சாமி (வயது42), நீராவிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கனகதங்கதுரை (24), இவரது சகோதரர் கவிக்குமார் (20) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

கிணற்றுக்குள் மோட்டாரை பொருத்துவதற்காக கிரேனில் கூடை அமைத்து அதற்குள் அமர்ந்து வேல்சாமி, கனகதங்கதுரை ஆகிய இருவரும் இறங்கினர். கிரேனை, கவிக்குமார் இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக கிரேனின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் கிரேன் கூடையில் அமர்ந்து சென்ற இருவரும் கிணற்றுக்குள் விழுந்து படுகாயமடைந்தனர். இதனைப் பார்த்து அங்கிருந்தவர்கள் சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற தீயணைப்பு  துறை வீரர்கள், கிணற்றுக்குள் விழுந்து படுகாயமடைந்து கிடந்த இருவரையும் மீட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த வேல்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த கனகதங்கதுரையை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து இருக்கன்குடி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News