சாத்தூர் அருகே, அகழ்வாராய்ச்சியில் தங்க ஆபரணம் கண்டுபிடிப்பு..!
சாத்தூர் அருகே அகழாய்வில், தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுளளது.;
அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க ஆபரணம்
சாத்தூர் :
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் - வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம், மேட்டுக்காடு பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது வரை தங்க அணிகலன், ஆண் உருவ சுடுமண் பொம்மை, யானை தந்த பகடைக்காய், சுடுமண் அகல்விளக்கு, சுடுமண் வணிக முத்திரை, சுடுமண்ணால் ஆன வட்ட வடிவத் தட்டு, சுடுமண் அணிகலன், பச்சை மற்றும் வெள்ளை நிற பாசி மணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது 3 கிராம் எடையளவுள்ள தங்க ஆபரணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் வடிவம் தாலி போன்று இருப்பதாகவும், இதில் 40 சதவிகிதம் தங்கம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நுண்ணிய வேலைப்பாடுகளுடன் ஆபரணங்கள் தயாரிக்கப்பட்ட தொழில் நுட்பம் அறிந்தவர்களாக நமது முன்னோர்கள் இருந்ததற்கான சான்றுகள் இங்கு கண்டெடுக்கப்படும் பொருட்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது என்று தொல்லியல் ஆய்வாளர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த தங்க ஆபரணம் பல நுண்ணிய வேலைப்பாடுகளைக் கொண்டதாக இருக்கிறது. நவீன காலத்தில் தொழில்நுட்ப நுணுக்கங்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட ஆபரணமாகத் தெரிகிறது. இதன்மூலமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆபரண வடிமைப்பு நுட்பத்தில் முன்னோர்கள் சிறந்து விளங்கியது தெரியவருகிறது.