விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் தடுக்க குழு அமைக்கப்படும்
விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுக்க குழு அமைக்க வேண்டும்;
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில், குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுக்க குழு அமைக்க வேண்டும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரதிநிதி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையி்ல், மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, தன்னார்வலர் விஜயகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரதிநிதி திருப்பதி பேசும்போது, விருதுநகர் மாவட்டத்தில் தற்போது குழந்தை திருமணங்கள் மிகவும் குறைந்துள்ளது. அதற்கு பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு ஒரு காரணம். மேலும் கல்வி கற்பதால் மட்டுமே நம்பிக்கையாக இருக்க முடியும். எனவே பெண் குழந்தைகளின் கல்வியை முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும். பெண் குழந்தைகள் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும்.
18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். குடும்ப சூழ்நிலை காரணமாக சில இடங்களில் குழந்தை திருமணங்கள் நடக்கின்றது. இதனை முற்றிலும் தடுக்க வேண்டும். சிவகாசி மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு வார்டுக்கும், ஒவ்வொரு குழு அமைத்து பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். குழந்தை திருமணம் குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று பேசினார். கூட்டத்தில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முனியம்மாள், காவல் சார்பு ஆய்வாளர் காசியம்மாள், ரயில்வே காவல்நிலைய சார்பு ஆய்வாளர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.