இதுக்கு பேருதான் டிரிபிள் சந்தோசம்

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-03-24 06:45 GMT

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இ.எஸ்.ஐ.காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் முத்துக்குமார். இவரது மனைவி வீரலட்சுமி. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வீரலட்சுமி மீண்டும் கர்ப்பம் தரித்திருந்தார். பிரசவத்திற்காக ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீரலட்சுமிக்கு, ஒரே பிரசவத்தில் 2 பெண், 1 ஆண் என மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது.

இது குறித்து அரசு மருத்துவர்கள் கூறும் போது, உயரிய சிகிச்சை மூலம் மூன்று குழந்தைகளும் நலமுடன் பிறந்துள்ளனர். குழந்தைகளின் எடை சற்று குறைவாக உள்ளது. மேலும் ஒரு குழந்தைக்கு சற்று மூச்சுத் திணறல் இருந்த நிலையில் உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டு, சரி செய்யப்பட்டது. தொடர்ந்து தாயும், குழந்தைகளும் மருத்துவ கண்காணிப்பில் நலமாக உள்ளனர் என்று கூறினர்.

குழந்தைகளின் தந்தை முத்துக்குமார் கூறும்போது, ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சி தான். இருந்தாலும் ஆட்டோ ஓட்டுனரான எனக்கும், கூலி வேலை பார்த்து வரும் எனது மனைவிக்கும் ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகளையும் வளர்ப்பது மிகவும் சிரமமாக இருக்கும். எனவே குழந்தைகளின் நலனுக்காக தமிழக அரசு ஏதேனும் உதவிகள் வழங்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News