காரியாபட்டி அருகே பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

இதன் மூலம் 40- க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகள் பாசனவசதி பெற்று பயன்பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Update: 2021-11-25 07:15 GMT

அத்திகுளம் பகுதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வட கிழக்குப்பருவ காற்றின் காரணமாக பெய்து வரும் கனமழையினால், சென்னை உட்பட தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஏரிகள்,குளங்கள்,கண்மாய்கள், அணைகள் ஆகியவை நிரம்பி வருகிறது.

இந்த நிலையில், விவசாயிகள் பயன்பெறும் விதமாக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருதுமால் நதிநீர் மூலம் பாசன வசதிபெறும் விவசாயிகளுக்காக விரகனூர் அணைக்கட்டிலிருந்தும் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் அத்திகுளம நீர் தேக்கத்திலிருந்து, உலக்குடி, இருஞ்சிறை, மறையூர், மானூர், அத்திகுளம், உழுத்திமடை, உட்பட 40- க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகள் பாசனவசதி பெற்று பயன்பெறும் வகையில், அத்திகுளம் அணைகட்டிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, , கிராம முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அணையை திறந்தனர்.

இதனால், கிருதுமால் நதிநீரால் சுமார் 40க்கும் மேற்பட்ட பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் செய்துள்ள கிராம விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், இதற்காக ஆவண செய்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கிருதுமால் நதிநீர் பாசன விவசாயிகள் சார்பாக நன்றியை தெரிவித்தனர். 

மேலும், இந்த அணை திறக்கும் நிகழ்ச்சியில் இருஞ்சிறை ஊராட்சி மன்றத் தலைவர் நாராயணசாமி, இருஞ்சிறை முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் மகேந்திரன், கூட்டுறவு செயலர் சண்முகம், இருஞ்சிறை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகன்,உலக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் தென்னரசு, மறையூர் ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல், உலக்குடி திமுக கிளை செயலாளர் முத்துப்பாண்டி, மறையூர் ஊராட்சி செயலர் அரிகிருஷ்ணன்,குடிநீர் ஆப்ரேட்டர் ரமேஷ்,சீமைச்சாமி மறையூர் செந்திவேல்,பாண்டி,குருசாமி,கோகுலன்,மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News