ராஜபாளையத்தில் பலத்த மழை: பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி

வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தாலும் வழக்கத்தை விட புழுக்கத்துடன் கூடிய வெப்பம் சற்று அதிகமாகவே இருந்தது.

Update: 2023-03-17 13:00 GMT

பைல் படம்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் மழையால்  விவசாயிகளும் கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில், நேற்று இரவு சுமார் அரை மணி நேரம் பரவலாக பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் சற்று கடுமையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 4 நாட்கள் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தாலும் வழக்கத்தை விட புழுக்கத்துடன் கூடிய வெப்பம்  சற்று அதிகமாகவே இருந்தது. மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில், இரவு நேரத்தில் ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள சொக்கநாதன்புத்தூர், சேத்தூர், முகவூர், தளவாய்புரம், தேவதானம், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் காலை முழுவதும் இருந்து வந்த வெப்பமான சூழ்நிலை சற்று மாறியது. கோடை காலத்தில் பெய்த மழையால் இந்தப்பகுதி  பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News