அருப்புக்கோட்டையில் பிக்பாக்கெட் திருடர்கள் கைது

Update: 2021-03-08 11:30 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பிக்பாக்கெட் திருடர்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் விரட்டி பிடித்தனர்.

அருப்புக்கோட்டை பாளையம்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்(42). கூலி வேலை செய்து வருகிறார். இவர் பேருந்துக்காக அகமுடையார் மஹால் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது அவர் பையில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் பிக்பாக்கெட் அடித்துச் சென்றனர். பணத்தை இழந்த அழகர் உடனே அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பழைய பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த இருவரை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர்.

அப்போது அவர்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் பிடிபட்டவர்கள் மதுரை மாவட்டம் கள்ளந்திரியை சேர்ந்த முருகன் மற்றும் அலங்காநல்லூரை சேர்ந்த பாண்டித்துரை என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அவர்களுடைய கூட்டாளியான மேலூர் ஆத்துமடையை சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவரையும் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் பிக்பாக்கெட் அடித்ததையும் ஓடும் பேருந்தில் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடித்ததையும் ஒப்புக்கொண்டனர். கைது செய்யப்பட்ட மூவரும் வேறு ஏதேனும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News