திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் அவதார நல்விழா

திருவண்ணாமலையில் அருளாளர் அருணகிரி நாதர் அவதார நல்விழா நடைபெற்றது

Update: 2024-06-23 02:49 GMT

விழாவில்வாழ்த்துரை வழங்கிய ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரம நிர்வாகி லாயர் சந்திரமோகன்

திருப்புகழைப் பாட, பாட வாய் மணக்கும் என்பார்கள். அந்த திருப்புகழ் பிறந்த இடம் திருவண்ணாமலை. திருப்புகழ் பாடல்களைப் பாடியவர் அருணகிரி நாதர்.

இவர் சுமார் 167 ஆலயங்களுக்கு சென்று முருகன் மீது பாடிய பாடல்களின் தொகுப்புதான் திருப்புகழ் ஆக உள்ளது. அருணகிரிநாதர் சுமார் 16 ஆயிரம் பாடல்களை முருகன் மீது பாடினார் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது 1328 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன

நமக்கு கிடைத்துள்ள 1307 திருப்புகழ் பாடல்களில் 1008 சந்த வகைகள் இருப்பதாக ஆராய்ந்து கண்டு பிடித்துள்ளனர். அவை கலைப் பொக்கிஷமாக போற்றப்படுகின்றன.

திருவண்ணாமலையின் அடையாளமாக திருவண்ணாமலைக்கு மேலும் பெருமை சேர்த்தவர் அருணகிரிநாதர். அவருக்கு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சுமார் ரூபாய் 1. 33 கோடியில் அருணகிரிநாதர் மணிமண்டபம் கட்டப்பட்டது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாகவும் அருணகிரிநாதர் மணிமண்டப அறக்கட்டளை அமைப்பினரால் நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையின் மூலமாகவும் மிகப்பிரமாண்டமான அருணகிரிநாதர் மணிமண்டபம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அருணகிரிநாதர் மணிமண்டபத்தில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகள் திருப்புகழ் சொற்பொழிவுகள் , சிறப்பு அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன.

அவதார நல்விழா

இந்நிலையில் அருளாளர் அருணகிரி நாதர் அவதார நல்விழா கிரிவலப் பாதையில் உள்ள அருணகிரிநாதர் மணி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

காலை 8 மணி அளவில் மங்கள இசை மற்றும் கயிலாய வாத்தியம் இசைக்க குமர கோவிலில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து அருணகிரிநாதருக்கு மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து திருப்புகழ் பாராயணம் மகாதீபாரதனை நடைபெற்றது. பகல் 12 மணி அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

மாலை 5 மணி அளவில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் இன்னிசை நிகழ்ச்சியில் மணிமண்டப தலைவர் சின்னராசு தலைமையில் “திருப்பம் தந்த திரும்புகழ்” என்ற தலைப்பில் முனைவர் ராமு அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியும், கோவை ரஞ்சனி ராம்குமார் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சியும், நடைபெற்றது

இரவு 7 மணி அளவில் வழக்கறிஞர் பழனிராஜ் எழுதிய “திருவண்ணாமலை நினைவு இழைகளால் நெய்த வரலாறு” என்னும் ஆன்மீக நூலினை ஓய்வு பெற்ற நீதிபதி சேது முருக பூபதி அவர்கள் தலைமையில் ஆகாஷ் ஹோட்டல் உரிமையாளர் முத்துகிருஷ்ணன் நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்கள்.

தொடர்ந்து ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரம நிர்வாகி லாயர் சந்திரமோகன், மணிமண்டப நிர்வாக சபை செயலாளர் அமரேசன், கோவை தொழிலதிபர் முருகன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியின் நிறைவில் மணிமண்டப பொருளாளர் தனுசு நன்றி உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரம நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் பாலமுருகன், திருவண்ணாமலை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விஜயராஜ், மணிமண்டப நிர்வாக குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி, மற்றும் ஏராளமான முருக பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News