திருச்சி காந்தி மார்க்கெட் அருகே இருந்த பழமையான மீன் மார்க்கெட் இடிக்கப்பட்டது

திருச்சி காந்திமார்க்கெட் அருகே இருந்த பழமையான மீன் மார்க்கெட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.

Update: 2021-09-16 12:49 GMT

திருச்சி காந்தி மார்க்கெட் பின்புறம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலான மிகவும் பழமையான மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட மீன் மற்றும் இறைச்சி கடைகள் ஆண்டாண்டு காலமாக செயல்பட்டு வந்தன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றியமைக்கப்பட இருப்பதால் இந்த மீன் மார்க்கெட்டை இடித்துவிட்டு அந்த பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்ட மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த ஒருவாரத்திற்கு முன்பே அங்கு வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு கடைகளை காலி செய்து கொடுக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர்கள் கடைகளை காலி செய்யவில்லை. இந்நிலையில் இன்று மதியம் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென பொக்லைன் இயந்திரங்களுடன் அங்கு வந்தனர்.

அப்போது மீன் மற்றும் இறைச்சி வியாபாரம் அங்கு நடந்து கொண்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக நின்றுகொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டதும் மீன் மற்றும் இறைச்சி வியாபாரிகள் இன்று ஒரு நாள் மட்டும் அவகாசம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே அவகாசம் கொடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. ஆதலால் கடைகளை காலி செய்யுங்கள் என்று கூறினர். இதனால் வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் வியாபாரிகள் மீன் விற்பனை செய்வதற்கு வசதியாக காந்தி மார்க்கெட் மணிக்கூண்டு அருகில் உள்ள டைமண்ட் ஜூப்ளி பஜார் பகுதியில் இடம் ஒதுக்கித் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர் இதனைத் வியாபாரிகள் சமாதானம் அடைந்தனர். அதன் பின்னர் அதிகாரிகள் இயந்திரங்களின் உதவியுடன் கடைகளை இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள்.

திருச்சி மீன் மொத்த விற்பனை மார்க்கெட் ஏற்கனவே திருச்சி உறையூர் காசிவிளங்கி பாலம் அருகே புதிய இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News