கலைஞர் பிறந்தநாளுக்கு முன்கொரோனா நிவாரணம்- 2 : திருச்சியில் ஸ்டாலின்

கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாள் -ஸ்டாலின்.

Update: 2021-05-22 05:53 GMT

திருச்சி - முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு - ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் உள்ளிட்ட 400 படுக்கை வசதிகளை தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள திருச்சி வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் 240 ஆக்ஸிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள்,தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு 60 படுக்கைகள்,100 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 400 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை பிரிவை தொடக்கி வைத்தார்.

அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் திருச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை டீன்,சுகாதார துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

திருச்சி அரசு தலைவராக மருத்துவமனையில் ஏற்கனவே 914 படுக்கை வசதிகள் இருக்கும் நிலையில் தற்போது 400 படுக்கை வசதிகளை முதலமைச்சர் திறந்து வைத்த நிலையில் அரசு மருத்துவமனையில் தற்போது ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள் உள்ளிட்ட மொத்த படுக்கை வசதிகள் 1314 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.பின்னர் அதே திருமண மண்டபத்தில் 50 ஆக்சிஜன் வசதிகள் மற்றும் 50 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 100 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ...என் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி.வாழ்த்து தெரிவிக்க வந்த அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு குறித்தே விவாதித்தேன்.கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.கொரோனா சிகிச்சைக்கான தகவல்களை பெற வார் ரூம் அமைக்கப்பட்டது.மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தது.

2.7 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் குழு. சென்னையை போன்று பிற மாவட்டங்களில் வார் ரூம் அமைக்க யோசித்து வருகிறோம். தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவற்றை தமிழகத்திலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கை நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.ஊரடங்கு மூலம் தொற்று பரவும் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்ககப்பட்டுள்ளது. மே 2-ம் தேதி முதல் கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.கலைஞர் பிறந்த நாளுக்கு முன்பாக கொரோனா நிவாரணத்தின் 2 ம் தவணை ரூ.2ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சியமைத்து 2 வாரங்களில் 16,938 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாள்.

Tags:    

Similar News