மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனித ஆற்றல் மூலம் மணல் அள்ள கோரிக்கை
மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனித ஆற்றல் மூலம் மணல் அள்ள அனுமதிக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.;
மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
திருச்சி மாவட்ட விவசாயிகளின் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் பால மாதவன் மற்றும் நிர்வாகிகள் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் திருச்சி மாவட்டத்தில் தாளக்குடி, மாதவப் பெருமாள் கோவில் ஆகிய இடங்களில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளுவதற்கு குவாரி அமைக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் 2000 மாட்டுவண்டி தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக இந்த குவாரிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் தற்போது இந்த குவாரிகளில் புதிய முறைப்படி இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
எந்திரங்கள் மூலம் மணல் அள்ளி போடும்போது மாட்டுவண்டிக்கு சேதம் ஏற்படும். மேலும் மாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் இந்த புதிய முறையை கைவிட வேண்டும் என நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் போது மீண்டும் பழைய முறைப்படியே மாட்டு வண்டிக்கு மனித ஆற்றல் மூலம் மணல் அள்ள உத்தரவிட வேண்டும், மாட்டு வண்டியில் ஏற்றப்படும் மணலுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் அது இதுவரை நடைமுறைக்கு வரவில்லை .ஆதலால் மணல் மாட்டு வண்டிகளில் மனித ஆற்றல் மூலம் மட்டுமே மணல் அள்ளுவதற்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.