திருச்சியில் அழுகிய நிலையில் ஆண் பிணம்:போலீசார் மீட்டு விசாரணை

திருச்சியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் பிணத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-15 10:30 GMT

திருச்சி துரைசாமிபுரம் 2-வது தெருவில் உள்ள வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் குறிப்பிட்ட அந்த வீட்டில் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

இந்த விசாரணையில் இதே பகுதியில் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்த கோவிந்தராஜ் (வயது 48). திருமணமாகாதவர். இவரது தந்தை சீனிவாசன் பல வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவரது தாயார் ராஜம்மாள். இவருடன் பிறந்த சகோதரிகள் 3 பேர் திருமணமாகி வெளியூர் சென்று விட்டதால் தனது தாயைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இத்தனை வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் தாய் ராஜம்மாள் கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் கடந்த சில நாட்களாக கோவிந்தராஜ் சோகத்துடன் காணப்பட்டுள்ளார். மேலும் இவரை இரண்டு நாட்களாக அருகில் குடியிருப்பவர்கள் பார்க்கவில்லை என தெரிவித்தனர். இந்நிலையில் இன்று பிணமாக அவரது வீட்டில் அழுகிய நிலையில் கிடந்துள்ளார்.

தற்போது பாலக்கரை போலீசார் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் கோவிந்தராஜ் உடல் நலக் குறைவு காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமாக உயிரிழந்தாரா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News