திருச்சியில் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் டீ ஆற்றி கொடுத்து பிரச்சாரம்

திருச்சி 12-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் டீ ஆற்றி கொடுத்து பிரச்சாரம் செய்தார்.

Update: 2022-02-13 15:03 GMT

டீ  கடையில் டீ ஆற்றி கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் புதன்கிழமை மாலையுடன் முடிய உள்ள நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வரும் 19-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக கோ. பாலமுருகன் "குலையுடன் கூடிய தென்னை மரம்" சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து தனது 12 வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் வீதி, வீதியாக ஒவ்வொரு வீடாக தனது உண்மையான ஆதரவாளர்களுடன் சென்று வேட்பாளர் பாலமுருகன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

மேலும் தனது வாக்குறுதிகளை துண்டு பிரசுரங்கள் மூலம் அச்சடித்து வீடுகள் தோறும் விநியோகம் செய்து தென்னைமரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வருகிறார். அவரது பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் இன்று 12-வது வார்டுக்குட்பட்ட மேலசிந்தாமணி, பாலாஜி அவன்யூ, பழைய கரூர் ரோடு, நடுத்தெரு, காவேரி பார்க் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து தென்னை மரம் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டி தீவிர பிரச்சாரம் செய்தார். வாக்கு சேகரிப்பின் போது அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்று அங்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு டீ ஆற்றி கொடுத்து நூதன முறையில் மக்களை கவரும் விதத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


அதே போல ரோட்டோரத்தில் இருந்த சலவை செய்யும் கடையில், துணிகளை இஸ்திரி போட்டு வேட்பாளர் பாலமுருகன் வாக்கு சேகரித்தார். இது வார்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இத்தகைய நூதன பிரச்சாரம் காரணமாக கடும் போட்டிகளை தாண்டி சுயேச்சை வேட்பாளர் பாலமுருகன் எளிதில் வெற்றி பெறுவார் என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் வேட்பாளர் பாலமுருகனுக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தீவிரமாக பணியாற்றி வருவது பாலமுருகனுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

Tags:    

Similar News