விபத்தில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வதில் போட்டி

மணப்பாறைஅருகே விபத்தில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல நீயா? நானா என ஆம்புலன்ஸ் டிரைவர்கள். போட்டி போட்டுக் கொண்டனர்.

Update: 2021-05-17 10:23 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ராயம்பட்டியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 55). இவர் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் மணப்பாறையில் இருந்து சங்கிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

புது காலனி   அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த டிராக்டர் மோதியதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகன் ராஜா படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் விபத்தில் இறந்த பழனியம்மாளின் உடலை ஒரு ஆம்புலன்சில் வந்தவர்கள் ஸ்டெச்சரில் ஏற்றி ஆம்புலன்சிற்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு வந்த மற்றொரு ஆம்புலன்ஸ் தன்னுடைய ஆம்புலன்சில் தான் ஏற்ற வேண்டும் என்று கூறி நீயா? நானா என போட்டி போட்டுக் கொண்டனர்.

இருப்பினும் ஒரு ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட உடல் மீண்டும் இறக்கப்பட்டு மற்றொரு ஆம்புலன்சில் ஏற்றி, கொண்டு செல்லப்பட்டது. ஒரு உடலை ஏற்ற இரண்டு ஆம்புலன்சில் வந்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டது அங்கிருந்தவர்கள் அனைவரையும் முகம் சுழிக்கச் செய்ததுடன் வேதனையும் ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற டிராக்டரை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News