தனது 16 வயது மகளை காதலித்த ஆட்டோ ஓட்டுனரை குத்தி கொலை செய்த தந்தை கைது.

இவர்களின் காதலுக்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படிக்கும் வயதில் இதெல்லாம் கூடாது என கண்டித்தனர்

Update: 2021-10-10 05:30 GMT

கும்பகோணம் அருகே கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் பிரபாகரன்

தனது 16 வயது மகளை காதலித்த ஆட்டோ ஓட்டுனரை குத்தி கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பந்தநல்லூர் அருகே வேட்டமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(24). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில், பிரபாகரன் பக்கத்து ஊரான காமாட்சிபுரம் சாவடி தெருவை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு சிறுமியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், படிக்கும் வயதில் இதெல்லாம் கூடாது என ஆலோசனை கூறியுள்ளனர். மேலும், சிறுமியின் தந்தை (ஆட்டோ ஓட்டுனர்) மணிகண்டன், பிரபாகரனை பல முறை எச்சரித்தாகவும்  கூறப்படுகிறது.

பிரபாகரன் இதனை கண்டு கொள்ளாமல் சிறுமியுடன் ஊர் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை மணிகண்டன் நேற்று மீண்டும் பிரபாகரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றியதையடுத்து, பிரபாகரனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டன் குத்தியதில் பிரபாகரன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுமியின் தந்தை மணிகண்டனை, திருவிடைமருதூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News