தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது: அமைச்சர் கே.என். நேரு

தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக நகர்ப்புற துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்

Update: 2021-06-16 05:45 GMT

டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக இன்று கல்லணை திறக்கப்பட்டது.

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக இன்று கல்லணை திறக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த கண்ணன் கூறுகையில், தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும், விதைநெல், உரம் தட்டுப்பாடு ஆகியவற்றை உடனடியாக போக்க வேண்டும், சிறு குறு விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும், நிபந்தனைகள் இன்றி விவசாய கடன் வழங்க வேண்டும், மேலும் தற்போது திறக்கப்பட்ட தண்ணீர் ஆனது சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது. எனவே கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்று 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் அப்போதுதான் கடைமடை வரை தண்ணீர் சென்றடையும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தண்ணீரை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு,  தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், எனவே 10 தினங்களுக்குள் கடைமடை வரை தண்ணீர் சென்றடையும். டெல்டா மாவட்டங்களில் தேவையான விதைநெல், உரம் தேவையான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், விவசாய கடனுக்காக 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நிச்சயம் எட்ட முடியும். டெல்டா மாவட்டங்களில் கொண்டு வரவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக இன்று பிரதமரை சந்தித்து முதலமைச்சர் அது குறித்து வலியுறுத்துவார் என தெரிவித்தார்.


Tags:    

Similar News